சனி, 24 நவம்பர், 2012

ஆதி நாராயணி மந்திரம்



ஆதி நாராயணி
 
"ஓம் கிலிம் சவ்வும் ஸ்ரீம் ஹரீம் சர்வ சௌபாக்கியம் தேவி அருள் ஆனந்த ரூபி நாராயணி மமவசம் குருகுரு சுவாஹா".
இந்த மந்திரத்தை நாளொன்றுக்கு 1008 -உரு வீதம் ஐந்து நாட்கள் செபம் செய்ய மந்திரம் சித்தியாகும்.
                                                                           

                                                                  பூஜை முறை

கற்கண்டு, வடை,பாயசம்,தேன்,தேங்காய்,புஷ்பம்,சந்தனம் முதலியன வைத்து தீபதூபம் காட்டி செபம் செய்ய  வேண்டும்.                                                                            
                                                                இதன் நன்மை

இம்மந்திரத்தை சித்தி செய்தவர்கள் மஞ்சளை கையில் வைத்துக்கொண்டு மேற்குரிய மந்திரத்தை மனதால் 9 உருவேற்றி அம்மஞ்சள் மந்திரித்து கொடுத்து பூசிவர சொல்லவும். இம்மஞ்சளை குழந்தைகளுக்கு பூசினால் குழந்தைகளுக்கு வரும் எல்லாவித தோசமும் (பாலகிரக தோசம்) நீங்கும். குழந்தை இல்லாதவர்கள் இம்மஞ்சளை பூசிவர குழந்தை பாக்கியம் உண்டகும். திருமணம் ஆகாத கன்னி பெண்கள் இம்மஞ்சளை பூசிவர உடனே வரன் கிட்டும், திருமணம் முடியும். மங்கலமான காரியம் எல்லாம் நடக்கும். என்று மலையாள மாந்திரீகம் என்னும் நூலில் சொல்லப்பட்டுள்ளது.

பகிர்வில் S.கலைச்செல்வன் B.Litt,M.A

சனி, 17 நவம்பர், 2012

காற்றே கடவுள் - கோரக்கர்


கடவுள் யார் ? எங்கே இருக்கிறார் ? எப்படி இருப்பார் ? கடவுள் என்று சொல்லப்படுவது எது ? என்ற கேள்வி நம்மில் பலருக்கும் இருக்கத்தான் செய்கிறது. இதற்கு கோரக்கர் கூறும் ஒரு சிறிய விளக்கத்தை உங்களுக்கா இங்கு பகிர்கிறேன்.

                                                                             காற்றே கடவுள் - கோரக்கர்


கோரக்கர்
 "
நாடான நாடதனிற் கடவுளென்று
நானிலத்திலாட்டு வித்தல் காற்று காற்று
கோடான கோடிதெய்வம் காற்றுக்கேதான்
கூறிவைத்தா ரல்லாது வேறொன்றில்லை
ஆடாத ஆட்டமெல்லாம் காற்றுமாகும்
அதுவகன்றா லகிலமுதலழிந்து போமே.(193)
                                   
                                        - கோரக்கர் சந்திரரேகை
பொருள் :
                                    உலகத்தில் கடவுள் என்று கூறுவதெல்லாம் காற்று, காற்றுமட்டுமே, கோடான கோடி தெய்வங்கள் இருப்பதாக சொல்வதும் இக்காற்றைத்தான், காற்றை கடவுளென்று கூறினார்களே தவிர வேறொன்றும் இல்லை. உலக இயக்கம் இயங்குவதும் காற்றால்தான் அது இல்லாவிட்டால் உலகம் அழிந்து போய்விடும் என்கிறார் கோரக்கர்.

செவ்வாய், 13 நவம்பர், 2012

நத்தைச் சூரி கற்பம் - கருவூரார்

சத்தியமாய்ச் சொல்லுகிறேன் நத்தைச்சூரி
  தாரணிக்குள் சாபமில்லை பெரியோர்கொள்வார்
சித்தியென்ற எட்டுமிதற் குள்ளேயாச்சு
  செகமெல்லாம் இதன் பெருமை திறமோ காணார்
சுத்தியென்ற சூரிதனைத் தினமுங் கொண்டால்
  சொல்லவொண்ணா ஆச்சரியம் இறுகுந்தேகம்
சுத்தியென்ற அருக்கனிலே காப்புகட்டிச்
  சொல்லடா மந்திரத்தைச் சூட்டுறேனே.

சூட்டுகிறேன் ஓம்வச்சிர ரூபிசூரி
  சூரி மகாவீரி சுவாகா வென்று
நாட்டுகிறேன் சமூலமே பிடுங்கிவந்து
  நன்றாகச் சூரணம்செய் சீனிநேரே
ஊட்டுகிறேன் கலந்துமண் டலந்தாந்தின்னு
 ஒரு நூறு இருபதுமோ வொருநாளும்
மாட்டுகிறேன் பத்திரத்தை வாயிலிட்டு
 

 மைந்தனே மலைகளெல்லாம் நொருக்கலாமே.


நொறுக்கலாம் விரையெடுத்துத் தினமும் கொண்டால்
  நூறூழி அளவுவரை இருக்கலாகும்
நோருக்கலாம் எந்தெந்தத் தொழில்கள்தானும்
 நோக்காதே மற்றுமொரு கற்பமேனும்
நொறுக்கலாஞ் சத்துருவும் வியாதிதானும்
  நுணுக்கமே உலகத்தோர் காணாரப்பா
நொறுக்கலாம் இம்மூலி சிரசில் வைக்க
  நோக்காதே தேவதைகள் போற்றும்பாரே
.

                                           -கருவூரார் பலதிரட்டு 300


பொருள்:       

  உலகத்தில் உள்ள எல்லாவகை மூலிகைக்கும் சாபம் உண்டு ஆனால் "நத்தைச் சூரி" என்கிற மூலிகைக்கு மட்டும் சாபம் இல்லை. இதன் மகத்துவத்தை அறிந்த பெரியோர்கள் இக்கற்பத்தை உட்கொள்வார்கள். எட்டு சித்துக்களும் இதற்குள்ளாகும்.

நத்தைச் சூரியைத் தினமும் உண்டுவர உடல் இறுகும். ஞாயிற்றுக்கிழமையில் நத்தைச் சூரிக்கு காப்புகட்டி  பிடுங்க வேண்டும். அப்படி பிடுங்கும் போது "ஓம் வச்சிர ரூபி சூரி சூரி மகாவீரி சுவாகா" என்று மந்திரத்தைச் செபித்து முழுச்செடியை பிடுங்கி வந்து உலர்த்தி நன்றாகச் சூரணம் செய்து அதற்கு சம அளவாக சீனி சேர்த்து ஒரு மண்டலம் உண்ண நூற்றி இருபது நாள் ஒரு நாளாகும்(நீண்ட ஆயுள் உண்டாகும்). அதிக வலிமை உண்டாகும். நத்தைச் சூரி இலையை வாயில் மென்று அதக்கிக் கொண்டால் மலையை நொறுக்கும் வலிமை உண்டாகும்.


நத்தைச் சூரி விதையைத் தினமும் சாப்பிட்டு வர நூறூழி காலம் இருக்கலாம்(நெடுங்காலம்). அத்துடன் அனைத்துச் சித்துக்களும் உண்டாகும். இக்கற்பம் இருக்கும் போது வேறு கற்பங்களை தேடாதே இதனால் வியாதிகளும், எதிரிகளும் நம்மை நெருங்கமுடியாது. இவ்வாறான நுணுக்கமான தகவல்களை உலக மக்கள் அறிய மாட்டார்கள். நத்தைச் சூரி மூலிகையை தலையில் வைத்துக்கொள்ள தேவதைகள் வசியமாகும் என்கிறார் கருவூரார்.
                                                
 பகிர்வில் S.கலைச்செல்வன் B.Litt,M.A

செவ்வாய், 6 நவம்பர், 2012

பாதாள அஞ்சனம்


                                        குப்பைமேனி வேர், வெள்ளைச்சாரணைவேர்

                                      வெள்ளெருக்கன்வேர், வெள்ளைக்காக்கணம் வேர்

                                                            வெள்ளைவிஷ்ணுகாந்திவேர்


      இவை ஐந்தையும் முறைப்படி காப்பு கட்டி சாபம் போக்கி ஆணிவேர் அறாமல் பிடுங்கி உலர்த்தி தீயில் கறுக்கி எடுத்து வைத்துக்கொண்டு ஒரு கோட்டானை பிடித்து உரோமம், குடல் போக்கி குழித்தைலம் எடுத்து மேற்கண்ட வேரை கல்வத்திலிட்டு இரண்டு சாமம் கோட்டான் தைலம் விட்டு அரைக்க வேண்டும். அதன்பின் புனுகு, கோரோசனை, பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, குங்குமப்பூ இவைகளை வகைக்கு குன்றிமணி அளவு சேர்த்து ஒரு சாமம் அரைத்தால் மை பக்குவம் அடையும். மை பக்குவம் ஆனதின் அடையாளம் தெரிய கல்வத்தின் அடியில் ஒரு ரூபாயை போட்டு அரைத்தால் அது மையில் தெரியும்.
                                                             
                                               
இதற்கு பூஜை மந்திரம்
 
ஓம் ஹ்ரிம் ஐம் மதன மேகலே மமகார்யம் ஸாதய ஸாதய ஸ்வாஹா.

இந்த மந்திரத்தை நாளொன்றுக்கு 1008 உரு வீதம் பனிரெண்டு நாள் செபித்தால் மை உயிர் பெறும்.அதன் பின் தான் உபயோகத்திற்கு ஆகும்.

நிவேதனம் செவ்வலரி புஷ்பம், சந்தனம், பன்னீர், பால், பழம், இளநீர், தேங்காய், பத்தி, சூடம், தயிர், பொங்கல் ஆகியவைகளை வைத்து தூபதீபம் காட்டி மையை பத்திரம் செய்யவும்.

                                                                     இதன் பிரயோகம்

இந்த மையை கொஞ்சம் எடுத்து வெற்றிலை ஒன்றில் தடவி விளக்கின் ஒளியில் பார்த்தால் பூமிக்குள் இருக்கும் பொருள்கள் யாவும் தெரியும். நவரத்தினம், தங்கம், வெள்ளி முதலிய உலோகங்கள் இருப்பதைக் காணலாம்.தண்ணீர், ஊற்று, தண்ணீருக்குள் இருக்கும் பொருள், மண்ணில் புதைந்துள்ள புதையல் முதலியனயாவும் தெரியும்.இது பாதாள அஞ்சனம் என்பதால் வேறு உபயோகத்திற்கு பயன்படாது என்று மலையாள மாந்திரீகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

                      பகிர்வில் S.கலைச்செல்வன் B.Litt,M.A

ஞாயிறு, 4 நவம்பர், 2012

மூட்டு வலி,குறுக்கு வலி நீங்க ...

மூட்டு வலி நீங்க...

1)முடக்கத்தான் கீரையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும். ஆரம்பம் என்றால் உடனே குணம் கிடைக்கும். நாள்பட்ட வலி என்றால் கண்டிப்பாக 40 நாட்கள் சாப்பிட வேண்டும். வலியிலிருந்து விடுபடுவது உறுதி.

2)மூட்டு வலிக்கு முட்டைக்கோஸ் சாற்றை அருந்தலாம். வலி ஏற்பட்டுள்ள மூட்டுக்களில் புதிய முட்டைக்கோஸ் இலைகளை அரைத்துப் பற்றுப் போடலாம்.

குறுக்கு வலி நீங்க ...

நல்லெண்ணெய்யை காய வைத்து, சூடேறியதும் இதில் 10 பல் பூண்டுகளைப் போட்டு, பூண்டுகள் சிவந்ததும் இறக்கி ஆற வைத்துக் கொள்ளவும். இந்த எண்ணெய்யை வலிக்கின்ற இடத்தில் நன்றாக தேய்த்துவிட வேண்டும். 3 மணி நேரம் கழித்து, வெந்நீரில் குளிக்க வேண்டும். இவ்விதம் 15 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் குறுக்கு வலி குணமாகும்.